அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: தம்பதி கைது
சென்னை, அரசு வேலை வாங்கி தருவதாக, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தம்பதியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன், 33. பிளஸ் 2 முடித்த இவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஹமீத் உசேன், 40, அவரது மனைவி சந்தியா, 36 இருவரும், எட்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், வேலை வாங்கி தராமல் ஏமாற்றினர்; பணத்தையும் திருப்பி தரவில்லை. சீனிவாசன் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், கணவன் - மனைவி இருவரும் சீனிவாசன் உட்பட, 46 பேரிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.