நீதிமன்ற உத்தரவு: கழிப்பறை இடிப்பு
மதுரவாயல், தனியார் கல்லுாரிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த பொதுகழிப்பறை, நீதிமன்ற உத்தரவு படி நேற்று இடிக்கப்பட்டது. சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சி பாடசாலை தெருவில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது கழிப்பறை இயங்கி வந்தது. இந்த கழிப்பறை தனியார் கல்லுாரிக்கு சொந்தமான இடத்தில், கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், கல்லுாரி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக் கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டது. உத்தரவின் அடிப்படையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுக் கழிப்பறையை இடித்து அகற்றினர். மாற்றாக அடையாளம்பட்டு சுடுகாடு அருகே, புதிய கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது.