உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி புழல்: விநாயகபுரம், கல்பாளையம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் மனைவி கோவிந்தம்மாள், 58; இவர், நேற்று காலை வாஷிங் மிஷினில் துணிகளை போட்டு, 'சுவிட்ச்' போட்ட போது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த கோவிந்தம்மாளை, அவரது மகன் மீட்டு பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் கோவிந்தம்மாள் இறந்தது தெரிய வந்தது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர். போன் திருடிய வடமாநில நபர் சிக்கினார் ஆவடி: ஆவடி, வெள்ளானுாரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 42. இவர், நேற்று முன்தினம் ஆவடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, வீட்டிற்கு செல்வதற்காக தடம் எண்: 61கே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் அவரது 'விவோ' மொபைல் போனை பறித்து தப்பினார். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த துர்கேஷ், 21; என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டின் பூட்டுடைத்து திருடிய நபர் கைது ஆவடி: ரெட்டிப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜமுனா, 53; தனியார் கல்லுாரி கேன்டீனில் பணிபுரிகிறார். கடந்த 11ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 3 சவரன் நகை, 45,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், திருட்டில் ஈடுபட்ட துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், 20; என்பவரை, நேற்று கைது செய்தனர். ஜுவல்லரியில் திருடிய ஊழியருக்கு 'காப்பு' யானைகவுனி: சவுகார்பேட்டை, வீரப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ் ஜெயின், 29. கடந்த ஆகஸ்டில், இவரது நகைக்கடையில், 150 சவரன் தங்க நகைகள் திருடு போயின. விசாரித்த யானைகவுனி போலீசார், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த குணகந்தி கிராந்தி, 26; ஈகா மணிகண்டா, 23; ஆகியோரை, செப்டம்பரில் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த சிவகுமார், 27 என்பவர், நேற்று முன்தினம் தெலுங்கானாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சர்ச் விடுதியில் மர்ம நபர் கைவரிசை திரு.வி.க.நகர்: பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத், 58. இவர், பெரவள்ளூர் டான் பாஸ்கோ சர்ச்சில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த, இவரது மொபைல்போன் மற்றும் 10 கிராம் வெள்ளி செயின் திருடு போனது. பணிப்பெண்ணிடம் விசாரித்த போது, மர்மநபர் ஒருவர், 'ஜெபிப்பதற்காக ஜெப அறைக்கு செல்ல வேண்டும்' எனக் கேட்டு சென்றதாகவும், அந்த நபரே, விடுதியில் உள்ள நான்கு அறைகளை திறந்து திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். இருவரை தாக்கிய சகோதரர்கள் கைது ஓட்டேரி: ஓட்டேரி, வாழைமா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல், 21. சில தினங்களுக்கு முன், மது போதையில் அப்பகுதியில் கலாட்டா செய்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதை தெளிந்த இம்மானுவேல், வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சரண், 23 மற்றும் சந்தோஷ், 22; ஆகியோர், சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த இம்மானுவேலின் தங்கை சங்கீதாவையும் தாக்கினர். இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், சரண் மற்றும் சந்தோஷை கைது செய்தனர். கடையில் திருடிய மூவருக்கு 'கம்பி' மதுரவாயல் : மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., 4வது பிளாக், பிரதான சாலை பகுதியில் மளிகை கடை நடத்துபவர் சுந்தர், 45; நேற்று முன்தினம் இவரது கடை கல்லாவில் இருந்த 1,000 ரூபாய் மற்றும் 15 கிலோ இரும்பு ராடு திருடப்பட்டிருந்தது. விசாரித்த மதுரவாயல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த விஜய், 23, ராமாபுரம் திருமலை நகரைச் சேர்ந்த சந்தோஷ், 23, மதுரவாயல் அய்யப்பா நகரைச் சேர்ந்த உதயா, 21 ஆகியோரை நேற்று கைது செய்தனர். மெட்ரோ பணித்தளத்தில் திருடியவர் கைது வளசரவாக்கம்: வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அருகே, மெட்ரோ வழித்தட கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள், இரண்டு மின் மோட்டார்கள் மற்றும் கேபிள்கள், கடந்த 11ம் தேதி திருடு போயின. விசாரித்த வளசரவாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆலப்பாக்கம், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த தயாளன், 24; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை