பயனற்ற ஆலந்துார் சுரங்க நடைபாதை இலகுரக வாகனங்களுக்கு ஏற்ப மாற்ற முடிவு
ஆலந்துார், ஆலந்துாரில் ஜி.எஸ்.டி., சாலையை கடக்க வசதியாக, 2005ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேல் இப்பாதை பயன்பாட்டில் இருந்தது.ஆலந்துார் மெட்ரோ ரயில் சேவை துவங்கிய பின், ஜி.எஸ்.டி., சாலையின் எதிர்புறம் உள்ள ஆசர்கானா பேருந்து நிலையத்திற்கு, பயணியர் மற்றும் பொதுமக்கள் சென்றடைவதற்காக, நடைமேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 9.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2020, பிப்., மாதம் நடை மேம்பாலம் திறக்கப்பட்டது.இதில், இரண்டு மின்துாக்கிகள், நான்கு நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், எல்.இ.டி., விளக்குகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதனால், அப்பகுதியில் இருந்த சுரங்க நடைபாதை பயன்பாடின்றி போனது.தற்போது, மடிப்பாக்கம், வாணுவம்பேட்டை, ஆதம்பாக்கம், மவுன்ட், ஆலந்துார் ஆகிய பகுதிகளில் இருந்து பூந்தமல்லி, கோயம்பேடு, பாரிமுனை வழித்தடங்களுக்கு செல்ல, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க வேண்டும்.இதற்காக, ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்து பணிமனை சென்று பயணிக்க வேண்டும். அல்லது தலைமை அஞ்சலகம் எதிரே, 'யு - டர்ன்' செய்து, ஒரு கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும்.இதனால், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. ஜி.எஸ்.டி., சாலையில் 'யு - -டர்ன்' செய்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, ஆலந்துார் சுரங்க நடைபாதையை, இலகு ரக வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நமது நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான அன்பரசன் ஆகியோர், ஆலந்துார் சுரங்க நடைபாதையை நேற்று பார்வையிட்டனர்.அப்போது, இலகு ரக வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையாக, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு செல்லும் வகையில், சுரங்க நடைபாதையை மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இந்த ஆய்வின்போது, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.