மண்டல கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள் தண்டையார்பேட்டையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதிக்கம் என கொந்தளிப்பு
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலத்தில், 34வது வார்டு முதல் 48வது வார்டு வரை என, மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், ஆர்.கே.நகர், பெரம்பூர் சட்டசபை தொகுதிகளில் தலா ஏழு வார்டுகளும்; ராயபுரம் தொகுதியில் ஒரு வார்டு உள்ளன. ஒன்பது பெண் கவுன்சிலர்களும், ஆறு ஆண் கவுன்சிலர்களும் உள்ளனர். இவர்களில் 10 பேர் தி.மு.க.,வினர் மற்ற ஐந்து பேரும் தி.மு.க., கூட்டணி கட்சியினர்.இந்த நிலையில், தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டம் தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், பல துறைகளின் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.அப்போது, அனைத்து கவுன்சிலர்களும் 'எம்.எல்.ஏ.,க்கள் எபினேசர், ஆர்.டி.சேகர் ஆகியோர் பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும்; மண்டல கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர். மேலும், மண்டல கூட்டத்திற்கு வந்தும் எந்த பிரயோஜனமும் இல்லைக்கூறினர். இதையடுத்து, கவுன்சிலர்கள் அனைவரும் திடீரென மண்டல கூட்டத்தை புறக்கணித்தனர்.இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கவுன்சிலர்கள் கூறியதாவது:மாதாந்திர மண்டல கூட்டத்தில் வைக்கப்படும் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படுவதில்லை. ஆண்டிற்கு இரண்டு கோரிக்கைகளே நிறைவேறுகிறது. வார்டு பணிகள் செய்ய முடியாததால், பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடிவதில்லை.எம்.எல்.ஏ., எபினேசர் புகைப்படம் எடுப்பதற்காக, கண் துடைப்பிற்காக மட்டுமே கூட்டங்களை நடத்துகிறார். மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், அவரது வார்டு வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார். மற்ற வார்டுகளை கண்டுகொள்வதே இல்லை.கடந்த மூன்றாண்டுகளில், பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், மாதாந்திர மண்டல கூட்டத்திற்கு ஒருமுறை கூட வந்ததில்லை. மாறாக, மாநகராட்சி அதிகாரிகளை அவரது அலுவலகத்திற்கு வரவைத்து, 'கவுன்சிலர்கள் சொல்லும் பணிகளை செய்யக் கூடாது' என, எச்சரிக்கிறார்.தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மூலம், சுகாதார துறையில், தற்காலிகமாக மருந்து ஊற்றும் பணிக்கு, வார்டுக்கு ஒரு பணியாளர்கள் என, கவுன்சிலர்கள் பரிந்துரையில் 15 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களை, எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், 'என் அனுமதி இல்லாமல் எப்படி பணி நியமனம் செய்தீர்கள்' எனக்கூறி, பணியில் இருந்து நிறுத்தினார்.இரண்டு எம்.எல்.ஏ.,க்களின் தலையீட்டால், கவுன்சிலர்கள் பணி செய்ய முடியாமல் முடங்கி போய் உள்ளோம்.எந்த ஒரு பணியையும், ரிப்பன் மாளிகை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து போராடி நிறைவேற்றும் நிலை உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.