பெண் இன்ஸ்., மிரட்டுவதாக டாக்டர் பரபரப்பு புகார்
தி.நகர், அடையாறு பகுதியில், தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணிபுரிபவர் ஷாம்பிரசாத். இவர், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அளித்துள்ளார்.அதன் விபரம்: கடந்த பிப்., மாதம், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அப்பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தன. அவர், குடும்ப வன்முறையால் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தாக்கப்பட்டது குறித்து மருத்துவ சான்றிதழ் வழங்கினேன். இந்த சான்றிதழை அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்ட பெண், மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி, மாம்பலம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுசல்யா என்பவர் என்னை தொடர்பு கொண்டார். என்னிடம் தனியாக பேச, அடையாறு கடற்கரை அருகே வரவழைத்தார்.அங்கு, இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் காவல் நிலைய எழுத்தர் சாதாரண உடையில் இருந்தனர். இருவரும் என்னை மிரட்டி, அவர்கள் எடுத்து வந்த ஆவணத்தில் கையெழுத்திட செய்தனர். இதுகுறித்து மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அளித்துள்ளேன். அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த புகார் குறித்து உயர் அதிகாரிகள், துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.