குடும்பத்துடன் டாக்டர் தற்கொலை வழக்கு பைனான்சியர் 10 பேரிடம் தீவிர விசாரணை
சென்னை, அண்ணா நகரில் குடும்பத்துடன் தற்கொலை செய்த டாக்டர், அவரது மனைவியின் மொபைல் போன்களில் இருந்த தகவலின் அடிப்படையில், பைனான்சியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அண்ணா நகர், 17வது பிரதான சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டாக்டர் பாலமுருகன், 53, உயர் நீதிமன்ற வழக்கறிஞரான அவரது மனைவி சுமதி, 47, மற்றும் இரு மகன்கள், தனித்தனியாக இறந்த நிலையில் துாக்கில் தொங்கியபடி இருந்தனர்.சம்பவம் குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'ஸ்கேன்' சென்டர் நடத்தி வந்த பாலமுருகன், தொழிலை விரிவுப்படுத்த, 5 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு மாத தவணையாக, 6 லட்சம் ரூபாய் செலுத்தி வந்தார் என்பது தெரியவந்தது.அவரது வீட்டில் மாத தவணைக்கு செலுத்த வேண்டிய காசோலைகள் மற்றும் கடன் கொடுத்தவர்களின் விபரங்கள் அடங்கிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடன் கொடுத்தவர்கள் மிரட்டல் விடுத்ததால், மகன்களை கொலை செய்து பாலமுருகனும், சுமதியும் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.'சிசிடிவி' வாயிலாக, பாலமுருகன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற பைனான்சியர்கள் 10 பேரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'பாலமுருகன், சுமதி ஆகியோரின் மொபைல் போன்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தற்கொலைக்கு துாண்டும் விதத்தில் பேசிய நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது' என்றனர்.