மழைநீரை சிட்கோ வுக்குள் திருப்பாதீங்க!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களில், 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு தொழிற்பேட்டைகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சிட்கோ வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் முனைவேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு மழை சீசனில், திருவள்ளூர் மாவட்ட குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் தேங்கிய மழைநீர், 'மோட்டார் பம்ப்' வாயிலாக, திருமழிசை, விச்சூர் போன்ற தொழிற்பேட்டைகளுக்குள் திருப்பி விடப்பட்டது. இதனால், அங்கு செயல்படும் நிறுவனங்களின் ஆலைகளில் தண்ணீர் புகுந்ததால், சாதனங்கள் சேதமடைந்து, தொழில்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு, அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இந்த மழை சீசனில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை, தொழிற்பேட்டைக்குள் மடைமாற்றாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.