உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருத்தணியில் தேவஸ்தான அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இல்லாததால் தவிப்பு தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்

திருத்தணியில் தேவஸ்தான அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இல்லாததால் தவிப்பு தனியார் விடுதிகளில் இரட்டிப்பு வாடகை வசூல்

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் இருந்தும், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில், 39 குளிர்சாதன குடில்கள், 48 அறைகள்; மலைப்பாதை எதிரில் கார்த்திகேயன் இல்லத்தில், 52 குடில்கள், 48 அறைகள், மலையடிவாரத்தில் திருக்குளத்தில் சரவணபொய்கை இல்லத்தில், 39 அறைகள் உள்ளன.இந்த அறைகள், பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வருகிறது. ஐந்தரை ஆண்டுகளுக்கு முன் வரை, குடில்கள் மற்றும் அறைகள், பக்தர்கள் தங்க ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் முறை இருந்தது.இதனால் பக்தர்கள், தங்கள் ஊரில் இருந்தே, முன்கூட்டியே முன்பதிவு செய்து, அறைகளில் தங்கி, கோவிலில் முருகப்பெருமானை வழிபடுவர்.இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, 2020ம் ஆண்டு முதல் தேவஸ்தான அறைகள் எடுப்பதற்கு 'ஆன்லைன்' முன்பதிவை, கோவில் நிர்வாகம் நிறுத்தியது.இதனால், திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல், தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி, தங்க வேண்டிய நிலை உள்ளது.பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம், அறைகள் மற்றும் குடில்களை முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் வசதி மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செயலி

திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தணிகை இல்லம் மற்றும் சரவணபொய்கை ஆகிய குடில்கள் பழுதாகி இருந்தன. அவற்றை சீரமைத்து, பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கார்த்திகேயன் இல்லத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இப்பணி முடிந்ததும், ஆன்லைன் முன்பதிவு துவங்கப்படும். இதற்கு முன், தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்தோம்.தற்போது, ஹிந்து அறநிலைய துறையின் உருவாக்கும் புதிய செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். இந்த செயலி வாயிலாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறைகள், அபிஷேகம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் பெறவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டிற்குள் புதிய செயலி நடைமுறை வரவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இரு மடங்கு வாடகை வசூல்

ஒரு நாளிற்கு திருத்தணி முருகன் கோவில் தேவஸ்தான இல்லங்களில், குளிர்சாதன குடில், 1,500 ரூபாய்; சாதாரண குடில், 800 ரூபாய்; அறை 400 ரூபாய். அதே தனியாரிடம் குளிர்சாதன குடில், 3,000; சாதாரண குடில், 1,000 ரூபாய்; அறை 400 ரூபாய். தனியார் விடுதியில் 12 மணி நேரம் மட்டுமே தங்குவதற்கு அனுமதி உள்ளது. தங்குவதற்கான கட்டணம் இரு மடங்கு இருப்பதால், கோவில் தேவஸ்தான அறைகளை திறக்க, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ