மூடிய அம்மா உணவகத்தை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
சென்னை:எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள 'அம்மா' உணவகத்திற்கு சாப்பிட, தினமும் ஏராளமானோர் வந்தனர்.பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது சம்பந்தமாக, மாநகராட்சியினர் பதாகையும் அமைத்தனர்.ஆனால், பராமரிப்பு பணி எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. மாறாக பெரிய அளவில் இருந்த உணவகத்தை சிறிதாக மாற்றி, ஒரு பகுதியை அலுவல் பயன்பாட்டிற்காக தயார் செய்துள்ளனர்.இந்த உணவகம் மூடியுள்ளதால், ருக்மணி லட்சுமிபதி சாலையில், அரசு கண் மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தை நாடிச் செல்ல வேண்டி உள்ளது. தவிர, ஏழை, எளிய மக்கள் தனியார் உணவகங்களில் அதிக பணம் கொடுத்து சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே மூடப்பட்ட 'அம்மா' உணவகத்தை திறக்க, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.