வாலிபரை வெட்டிய தந்தை - மகன் கைது
வியாசர்பாடி: வாலிபரை கத்தியால் வெட்டிய, தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்தவர் அஜய், 22. இவர் மீது எட்டு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் வியாசர்பாடி, நேரு நகர் அருகே அழைத்து சென்றுள்ளார். அப்போது, அஜய் - சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சாமுவேல், கத்தியால் அஜய் தலையில் வெட்டி உள்ளார். அவருடன் சேர்ந்து, சாமுவேல் தந்தை பன்னீர் செல்வம் மற்றும் உறவினர் தீபக் ஆகியோர், அஜயை தாக்கியுள்ளனர். இதில் அஜய்க்கு, தலை மற்றும் வலது தோள்பட்டையில் வெட்டு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், தாக்குதலில் தொடர்புடைய சாமுவேல், 18, அவரது தந்தை பன்னீர் செல்வம், 42, ஆகியோரை, நேற்றிரவு கைது செய்தனர்.