சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்ட மகளை சரமாரியாக வெட்டிய தந்தை
கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊரப்பாக்கம், பிரியா நகரில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வராஜ், 56. இவரது மகள் தாட்சாயிணி, 37. இவர், திருமணமாகி கணவர் டேவிட்ராஜ் உடன், வானுவம்பேட்டையில் வசித்து வருகிறார்.செல்வராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால், செல்வி, 44, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். செல்விக்கு முதல் கணவர் வாயிலாக மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், செல்வராஜின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு, மகள் தாட்சாயிணி தன் கணவருடன் வந்துள்ளார். அப்போது சொத்து தகராறு ஏற்படவே, தந்தையுடன் தாட்சாயிணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆத்திரமடைந்த செல்வராஜ், வீட்டில் இருந்த கத்தியால் தாட்சாயிணியை சரமாரியாக வெட்டி உள்ளார். பலத்த காயமடைந்த தாட்சாயிணி, ஒருகட்டத்தில் கத்தியை பறித்து, 'இதற்கெல்லாம் நீ தான் காரணம்' எனக் கூறி, சித்தி செல்வியின் தலையில் வெட்டி உள்ளார்.அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாட்சாயிணி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.