மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை தரவில்லை: மீனவர்கள் புகார்
சென்னை:சென்னையில் இயற்கை பேரிடர், வெள்ளம் மற்றும்புயல் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகுகள் மற்றும் அவற்றை இயக்குபவர்களுக்கு, உரிய தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்தாண்டு நவம்பர்,டிசம்பரில் வெள்ளம் மற்றும் புயல் மீட்பு பணிகளுக்கு, மீனவர்களிடம் இருந்து, பைபர் படகுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. படகுகளை இயக்க தலா இரண்டு பேர் என நியமிக்கப்பட்டனர். அந்த படகுகளுக்கும், அதை இயக்குபவர்களுக்கும், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி வாயிலாக, வாடகை பணம் மற்றும் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டது.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள படகுகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டன.அதற்கான வாடகை பணம் மற்றும் சம்பளம்,ஆறு மாதங்களாகியும் வழங்கவில்லை என, மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் பாரதி கூறியதாவது:தமிழக அரசிடம் போதிய படகுகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், இயற்கை பேரிடர் காலம், வெள்ளம் மற்றும் புயல் மீட்பு பணிகளின்போது, மீனவர்களிடம் உள்ள பைபர் படகுகள் பயன்படுத்தப்படும்.கடந்த 2015ம் ஆண்டிலிருந்து, அவ்வாறு பயன்படுத்தப்படும் படகுகளுக்கு, வாடகை வழங்கும் முறை அமலானது. அதில் இருந்து, சரியான நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட உரிய தொகை அவரவருக்கு கிடைத்து விடும்.ஆனால், கடந்த ஆண்டு, நவ., - டிச., மாதங்களில் மீட்பு பணிக்காக, பல பைபர் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. பைபர் படகுகளுக்கு, நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய்; படகு இயக்குபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 1,300 ரூபாய் வீதமும் வழங்கப்படும் என்று கூறினர். மீட்பு பணியில் 10 நாட்கள் ஈடுபட்ட படகிற்கு, 40,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், ஏப்ரலில் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இது, மீனவர்களை வஞ்சிக்கும் செயல்.படகு ஓட்டுநர் சம்பளம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது, கூடுதல் கவலை அளிக்கிறது.எனவே, வெள்ள நிவாரணம் மற்றும் புயல் மீட்பு பணியில் ஈடுபட்ட பைபர் படகுகளுக்கான வாடகை பணம் மற்றும் ஓட்டுநர்களுக்கான சம்பள தொகையை, தாமதிக்காமல் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.