நியூ சரவணா ஸ்டோர் இயக்குநரிடம் ரூ.2.30 கோடி மோசடி செய்த கும்பல் ரோலக்ஸ் என ரூ.400 வாட்ச் விற்பனை
சென்னை: 'ரோலக்ஸ்' உள்ளிட்ட உயர் ரக இரு கைக்கடிகாரங்கள் வாங்கி தருவதாக கூறி, நியூ சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குநரிடம், 2.30 கோடி ரூபாய் பெற்று, பர்மா பஜாரில் 400 ரூபாய்க்கு விற்கும் கை கடிகாரங்களை கொடுத்து மோசடி நடந்துள்ளது. தி.நகர், ஜி.என்.செட்டி சாலையைச் சேர்ந்தவர் லோகேஷ் ஸ்ரீரத்தினம், 23; தி.நகர் நியூ சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குநர். அவருக்கு பழக்கமான, கோவை சிங்காநல்லுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்தி என்பவர் மூலம், ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சரவணகுமார், 43, என்பவர் பழக்கமானார். கடந்த செப்., 24ல், துபாயிலிருந்து விலை உயர்ந்த 'ரோலக்ஸ்' கை கடிகாரங்கள் வாங்கித் தருவதாக கூறி, 1.60 கோடி ரூபாயை வங்கி மூலமாகவும், மீதமுள்ள, 70 லட்சம் ரூபாயை ஹவாலா பணமாகவும், லோகேஷ் ஸ்ரீரத்தினத்திடம் வாங்கி உள்ளார். பின், சரவணகுமார் கொடுத்த இரண்டு விலை உயர்ந்த கடிகாரமும் போலியானது; பர்மா பஜாரில் 400 ரூபாய்க்கு விற்கக்கூடியது என்பது தெரிய வந்தது. இதையறிந்த, லோகேஷ் ஸ்ரீரத்தினம், 18ம் தேதி அன்று, போலீஸ் உயர் அதிகாரிக்கு, தொலைபேசி வழியே புகார் அளித்துள்ளார். புகார் தாரரின் வீட்டிற்கு சென்ற அபிராமபுரம் போலீசார், 2.30 கோடி மோசடி என்பதால், இவ்வழக்கு விசாரணையை தாங்கள் மேற்கொள்ள முடியாது எனக்கூறி, புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு அனுப்பினர். மோசடி குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.