விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்
மதுராந்தகம், சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 50 பயணியருடன், நாகர்கோவில் நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது.செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில், திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று சென்றது. அப்போது, எதிர்பாராத விதமாக, சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதாமல் இருக்க, லாரி சட்டென வலதுபுறம் சென்றதால், அரசு பேருந்து மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து, சாலை ஓரத்தில் நின்ற டிராவல்ஸ் வேன் மீது மோதியது.இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணியர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். படாளம் போலீசார், அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.