உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலவேடு ஏரிக்கரை சாலையில் திகில் பயணம்

பாலவேடு ஏரிக்கரை சாலையில் திகில் பயணம்

ஆவடி: பாலவேடு ஏரிக்கரை சாலையில், மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் பயணித்து வருகின்றனர். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பாலவேடு. 10 ஆண்டுகளுக்கு முன், பாலவேடு ஏரி கரையோரம், தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. தாம்பரம் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியாக, திருநின்றவூர், பாக்கம், பெரியபாளையம், செங்குன்றம் மற்றும் திருவள்ளூர் செல்வோர், 5 கி.மீ., சுற்றி செல்வதற்கு பதில், விரைவாக பயணிக்க இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், 500 மீ., துாரத்துக்கு மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்று வருகின்றனர். மின்விளக்கு அமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், இச்சாலையில் டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. இதனால் போதை நபர்களால், விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலவேடு ஏரிக்கரை சாலையில் போதுமான மின் விளக்குகளை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ