கன்டெய்னர் லாரி மோதி விபத்து இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி பலி
மாதவரம்:விருகம்பாக்கம், 'தைஷா' அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சொர்ணலட்சுமி, 40; ஐ.ஓ.என்., இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி. அதே குடியிருப்பைச் சேர்ந்தவர், அவரது தோழி பிரபா, 42. இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வத்தின் மனைவி.இருவரும், நேற்று முன்தினம் இரவு, மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி தோழியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.மஞ்சம்பாக்கத்தில் இருந்து மாதவரம் மேம்பாலம் நோக்கி செல்லும் வழியில், சின்ன ரவுண்டானா அருகே, வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டரில் மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், லாரியின் பின்பக்க சக்கரம் சொர்ணலட்சுமியின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.பின்னால் அமர்ந்து வந்த பிரபாவின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பிரபாவிற்கு, சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சொர்ணலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் பாண்டியராஜன், 44, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அலட்சியம்
சென்னையின் நுழைவு வாயிலான, மாதவரம் 200 அடி சாலையில், மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. மேலும், சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள், கண்டமேனிக்கு நிறுத்தப்படுகின்றன. அவற்றை அகற்றும் பணியில், மாதவரம் போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.