சர்வதேச வில் வித்தை போட்டி; எஸ்.ஆர்.எம்., மாணவர் தங்கம்
சென்னை: சீனாவில் நடந்த சர்வதேச வில் வித்தை போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் திருமுருகணேஷ் மணிரத்னம் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். உலக வில் வித்தை சங்கம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான சீனா - தைபே உட்புற உலக வில் வித்தை போட்டி தொடர், சீனா - தைபேயின் தாயுவான் நகரில், கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், உலகின் 19 நாடுகளைச் சேர்ந்த, 500 வில் வித்தை வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டி, ரீகர்வ், காம்பவுண்ட் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடந்தது. மேலும், 13, 15, 21 வயதுக்குட்பட்டோர் மற்றும் சீனியர் என, நான்கு வயது பிரிவுகளில் நடைபெற்றது. அந்த வகையில், ஆண்கள் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் திருமுருகணேஷ் மணிரத்னம், 21, முதல் இடத்தை பிடித்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், இதற்கு முன் நடந்த, 2025 உலக இளைஞர் வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.