ரயில் பயணியை தாக்கி போன் பறித்தோர் கைது
எண்ணுார், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்தவர் மோகனராவ், 38, பணி நிமித்தமாக சென்னை வந்தவர், டிச., 9ல், சென்னை சென்ட்ரலில் இருந்து, 'பினாகினி' விரைவு ரயிலில் ஆந்திராவிற்கு திரும்பினார்.'சிக்னல்' பிரச்னையால், ரயிலின் வாசல் அருகே வந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். எண்ணுார் ரயில் நிலையம் அருகே, ரயில் மெதுவாக சென்றபோது, இருவர் மோகனராவை தாக்கி, அவரிடமிருந்த விலையுயர்ந்த மொபைல் போனை பறித்து தப்பியோடினர். இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்தனர்.இதில், நேற்று முன்தினம் எண்ணுார் ரயில்நிலையம், நடை மேடை 2ல், சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.மேலும், பிடிபட்டவர்கள், எண்ணுார், வ.உ.சி., நகரைச் சேர்ந்த ஹரிஹரன், 20, மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இருவரையும், நேற்று கைது செய்த ரயில்வே போலீசார், ஹரிஹரனை புழல் சிறையில் அடைத்தனர்.