பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்டவர் கைது
ஆதம்பாக்கம், காதலித்து பிரிந்த பெண்ணின் பெயரில் போலியான, சமூக வலைதள கணக்கு துவக்கி, அவரது ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த விமான நிலைய தற்காலிக ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21வயது பெண், தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், ஆதம்பாக்கம் போலீசாரிடம் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு விபரம்:சமூக வலைதளம் மூலமாக, தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல்லைச் சேர்ந்த கணபதி, 30, என்பவரை காதலித்தேன். அவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரைவிட்டு விலகினேன். இதனால் அவர், நான் இறந்துவிட்டதாக சமூக வலைதளமான 'இன்ஸ்டா'வில் தகவல்களை அவதுாறாக பரப்பினார்.இந்நிலையில் என் பெயரில் போலியான பல கணக்குகளை துவங்கி, அதில் என் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து,தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.ஆதம்பாக்கம்போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், போலி கணக்கு துவக்கி ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த கணபதியை, போலீசார் கைது செய்தனர்.பி.இ., பொறியாளரான இவர், மீனம்பாக்கம் பகுதியில் தங்கி, விமான நிலையத்தில் 'கியூ பிளஸ்' பாதுகாப்பு பிரிவில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.