ஓட்டுநரின் கண்ணெதிரே கார் திருடிய நபருக்கு வலை
குன்றத்துார்: சவாரிக்கு அழைத்து, ஓட்டுநரின் கண்ணெதிரே நுாதனமாக கார் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார், 35; தனியார் கால் டாக்சி ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை ஒரகடத்தில் இருந்து குன்றத்துார் அருகே மலையம்பாக்கத்திற்கு, மாருதி 'ஸ்விப்ட் டிசைர்' காரில், ஒருவரை சவாரிக்கு அழைத்து சென்றார். மலையம்பாக்கம் பகுதியில் செல்லும்போது, காரில் பயணித்த நபர் தன் தாய்க்கு உடல் நலம் சரியில்லை; அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அழைத்து செல்ல வேண்டும்; உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதை நம்பிய ஓட்டுநர் மகேந்திர குமார், காரில் இருந்து கீழே இறங்கி உதவி செய்ய வந்தபோது, அவரது கவனத்தை திசை திருப்பி, காரில் பயணித்த நபர் காரை திருடி தலைமறைவானார். இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.