கள்ளக்காதலனால் தீக்காயமடைந்தவர் பலி
எண்ணுார், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் நுாரிஷா, 42. இவருக்கு பழக்கமான, திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, 47, என்பவர், கடந்த 9ம் தேதி மாலை இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.தகராறில் ஈடுபட்டு, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதோடு, நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இருவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நுாரிஷாவை காப்பாற்ற முயன்ற அவரது தாய் ஜெனிமா, 80, என்பவருக்கும், தீக்காயம் ஏற்பட்டது.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் நுாரிஷா உயிரிழந்தார். டில்லிபாபு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எண்ணுார் போலீசாரின் விசாரணையில், 'இருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என, டில்லிபாபு வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில், டில்லிபாபுவிடம் பேசுவதை நுாரிஷா நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டில்லிபாபு, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததுடன் அப்பெண்ணையும் கட்டி பிடித்துள்ளார்' என, தெரியவந்துள்ளது.