பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தாமதம்
சென்னை, மின்வயர் அறுந்து விழுந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூந்தமல்லி பணிமனை - முல்லைத்தோட்டம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தடைபட்டது.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116 கி.மீ., துாரம், மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வழிதத்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை; கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதை அமைகிறது.இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. குறிப்பாக, பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.இந்நிலையில், இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே, 3 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில், நேற்று மாலை மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்த முடிவானது.இதற்காக, மெட்ரோ ரயில் மற்றும் மின் இணைப்புகள் தயாராக இருந்த நிலையில், மின்வயர்கள் அடிக்கடி அறுந்து விழுந்தன. ரயில் பாதை அருகில் இருந்த மின்விநியோக பெட்டிகளும் சிதறியது.இதையடுத்து, மின்விநியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, சோதனை ஓட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.தொழில்நுட்ப குளறுபடிகள் தீர்க்கப்பட்டு, இரவில் சோதனை நடத்த, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.