உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போக்குவரத்து திடீர் மாற்றத்தால் திணறிப்போன வாகன ஓட்டிகள்

 போக்குவரத்து திடீர் மாற்றத்தால் திணறிப்போன வாகன ஓட்டிகள்

சென்னை: முன்னறிவிப்பின்றி போக்குவரத்து நேற்று திடீரென மாற்றி அமைக்கப்பட்டதால், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறினர். ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.,சாலை - அம்புஜம்மாள் தெரு அருகே மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், ஒருவழிப்பாதையாக இருந்த டி.டி.கே., சாலை மேம்பாலம் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. அதேபோல், அடையாறிலிருந்து, டி.டி.கே., சாலை வழியாக ராயப்பேட்டை செல்வோர், சி.வி.,ராமன் சாலையில் வலது புறம் திரும்பி, பின் சி.பி.,ராமசாமி சாலையில் இடது புறம் திரும்பி, மேம்பாலம் வழியாக எளிதாக கடந்து சென்று வந்தனர். இந்நிலையில், மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்ததை அடுத்து, முன்னறிவிப்பு இன்றி அவசர அவசரமாக போக்குவரத்து போலீசார் நேற்று, போக்குவரத்தை பழையபடி மாற்றினர். இதற்காக, மேம்பாலத்தில் இருவழிப்பாதைக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய போலீசார், ஆங்காங்கே வைக்கப்பட்ட வழிகாட்டி பதாகைகளை அகற்றவில்லை. மேலும், 'கூகுள் மேப்'பிலும் வழி மாற்றப்பட்டதை, 'அப்டேட்' செய்யாமல் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினர். இதனால், உள்ளூர் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வந்தோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். டி.டி.கே.,சாலை, எல்டாம்ஸ் சாலை, சி.வி.,ராமன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர சேவை வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் திண்டாடின. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே, இந்த குழப்பத்திற்கு காரணம் என, போக்கு வரத்து எஸ்.ஐ., ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ