தேசிய பொது இயக்க அட்டையை மெட்ரோவில் எளிதாக பெறலாம்
சென்னை'மாநகர பேருந்து, புறநகர் ரயில் உள்ளிட்டபோக்குவரத்து சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய, தேசிய பொது இயக்க அட்டை பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:மெட்ரோ பயணியரின் வசதியை மேம்படுத்த, தொடர்ந்து பல்வேறு வகையான பயண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தேசிய பொது இயக்க அட்டை துவக்கப்பட்டது. இதுவரை மொத்தம், 3.89 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கு முன், இந்த அட்டை பெற பயணியரிடம் கே.ஒய்.சி., விபர சரிபார்ப்பு பதிவு தேவைப்பட்டது; தற்போது இந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.பயணியர் தங்கள் மொபைல் போன் எண்ணை வழங்கி, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் வாயிலாக உறுதிப்படுத்தினால், உடனுக்குடன் மெட்ரோ நிலையங்களில், தேசிய பொது இயக்க அட்டையை பெறலாம்.இப்புதிய வசதி, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், 20 சதவீத தள்ளுபடியும் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.