வடிகால் பணியால் குழாய், மூடி உடைப்பு சீரமைக்க ஒப்பந்த நிறுவனம் அலட்சியம்
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில் 120க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அருகில் 500 அடி அகல கால்வாய் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், கால்வாய் நிரம்பி சுனாமி நகரில் வெள்ள பாதிப்பு ஏற்படும்.இதை தடுக்க, 100 தெருக்களில், 2 - 4 அடி அகலம், 3 அடி ஆழம், 10 கி.மீ., துாரத்தில், 40 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.இந்த பணிக்காக பள்ளம் தோண்டும்போது, கழிவுநீர் குழாய் மற்றும் 44 இயந்திர நுழைவாயில் மூடிகள் சேதமடைந்தன.திட்ட பணி 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சேதமடைந்த குழாய்கள், மூடிகளை, ஒப்பந்த நிறுவனம் சீரமைக்காமல் அலட்சியம் செய்கிறது.இதனால், மண் மற்றும் பிளாஸ்டிக் குப்பை, குழாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பிரச்னை அதிகரித்துள்ளது.அடிக்கடி மழை பெய்வதால், மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால், சுகாதார பிரச்னையும் ஏற்படுகிறது.நோய் பாதிப்பு ஏற்படாத வகையில், குழாய் சேதம் மற்றும் இயந்திர நுழைவாயில் மூடிகளை சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.