நெட்வொர்க் பிரச்னையா? பி.எஸ்.என்.எல்., விளக்கம்!
சென்னை: அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக, தற்காலிக சிக்னல் பாதிப்பு ஏற்பட்டதாக பி.எஸ்.என்.எல்., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில நாட்களாக 'நெட்வொர்க்' பாதிப்பு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள விளக்கம்: தாம்பரம், பெருங்களத்துார், கேளம்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதிகளில், மொபைல் சேவைகள் சீராக இயங்குகின்றன. அனைத்து தொழில்நுட்ப அளவீடுகளும் இயல்பாக உள்ளன. வண்டலுார் தொலைத்தொடர்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய மேம்பாட்டு பணிகளால், குறுகிய நேரம் சிக்னல் இடையூறு ஏற்பட்டது. பெரிய அளவில் புகார்கள் எதுவும் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.