சிங்கார சென்னை அட்டையில் புது வசதி இனி பயணியரே ரீ சார்ஜ் செய்யலாம்
சென்னை, பயணியரே, 'ரீசார்ஜ்' செய்யும் வகையில், சிங்கார சென்னை அட்டையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.மாநகர போக்குவரத்து கழகத்தின், அனைத்து பஸ்கள், மெட்ரோ ரயில்களிலும் 'சிங்கார சென்னை பயண அட்டை' வாயிலாக பயணிக்கலாம். இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், 'ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி' சார்பிலான 'சிங்கார சென்னை ' பயண அட்டையை, சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.மெட்ரோ ரயில், மாநகர பஸ்களில் உதவும் இந்த அட்டை, 100 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில், 50 ரூபாய் மதிப்பிலான பயணம் மேற்கொள்ளலாம். மேலும், இணையவழி சேவை, மொபைல்போன் செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 'ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி'யின் விற்பனை மையங்கள் வாயிலாக, எளிதாக ரீசார்ஜ் செய்ய முடியும்.குறிப்பாக அட்டையின் பின்புறம் உள்ள க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்து, பயணியரே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். முக்கிய பஸ் நிலையங்களிலும் இந்த பயண அட்டை விற்பனை செய்யப்படும் என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.