செய்திகள் சில வரிகளில்...
சாலையோர கடைகள் தீக்கிரை பட்டாபிராம்: பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே வெளிவட்ட அணுகு சாலையோர மூன்று கடைகள், சில மாதங்களாக பயன்பாடின்றி மூடி கிடந்தன. இந்நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில், அவை திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடைகள் தீக்கிரையாகின. கஞ்சா விற்ற இருவர் கைது ஓட்டேரி: ஓட்டேரி, ஐதர் கார்டன் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மங்களபுரத்தைச் சேர்ந்த சரத்குமார், 28, என்பவரை, ஓட்டேரி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி, கஞ்சா சப்ளை செய்த மாயக்கண்ணன் என்பவரை கைது செய்து 30,000 ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெண்ணை தாக்கிய வாலிபர் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராணி, 50. கடந்த 9ம் தேதி வீட்டின் அருகே நின்றிருந்த இவரி டம், வண்ணாரப்பேட்டை, மூலகொத்தளத்தைச் சேர்ந்த ஆதின், 20, என்ற வாலிபர், மது போதையில் வீண் தகராறு செய்து, கல்லால் தாக்கியுள்ளார். பேசின் பாலம் போலீசார், ஆதினை நேற்று கைது செய்தனர். போதை மாத்திரை விற்ற சிறுவன் கைது எம்.கே.பி.நகர்: எம்.கே.பி.நகர், சஞ்சய் நகர் பார்க் பகுதியில், போதை மாத்திரைகள் விற்ற, வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்த எம்.கே.பி.நகர் போலீசார், 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சிறுவன் மீது வழக்கு பதிந்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.