மகனுக்கு பெண் தர மறுத்த தொழிலாளியின் மூக்குடைப்பு
ஆதம்பாக்கம்,ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், 5வது தெருவை சேர்ந்தவர் அன்சாரி, 40; கட்டுமானத் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ், 50, என்பவர், அன்சாரியிடம் உன் அக்காள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க உதவ முடியுமா' என, கேட்டுள்ளார்.குடிபோதையில் இருந்த அன்சாரி, அதற்கு மறுத்துள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ராஜ், அன்சாரியின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார்.அங்கிருந்த பைக் மீது தடுமாறி விழுந்த அன்சாரிக்கு, கண், மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது.அங்கு வந்த உறவினர்கள் அன்சாரியை மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.