50 சதவீத ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கம் முனையத்தில் அனுமதி
சென்னை: 'கிளாம்பாக்கத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், 50 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும்' என, போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமீறல்களை தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. கிளாம்பாக்கத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், 50 சதவீதம் ஆம்னி பேருந்துகளை மட்டுமே முனையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என, ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விதிமீறிய ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும், கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் வசூல், வரி செலுத்தாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட, 357 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 43.56 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.