உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் அ.தி.மு.க., டல் மாவட்ட செயலர் மீது பழனிசாமி பாய்ச்சல்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் அ.தி.மு.க., டல் மாவட்ட செயலர் மீது பழனிசாமி பாய்ச்சல்

முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற, கொளத்துார் சட்டசபை தொகுதியில், 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள், 30 சதவீதம் மட்டும் முடிந்துள்ளதால், மாவட்டச் செயலர் வெங்கடேஷ்பாபுவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டித்த தகவல் வெளியாகி உள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தல் வியூகம், கட்சிப் பணிகள் குறித்து, மாவட்டச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன், பழனிசாமி இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது, சில மாவட்டச் செயலர்கள், பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அவர்கள், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை சமர்ப்பிக்க, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் சட்டசபை தொகுதியில், 30 சதவீதம்; வில்லிவாக்கம் தொகுதியில், 40 சதவீத பணிதான் முடிந்துள்ளது. இவ்விரு தொகுதிகளும், வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலர் வெங்கடேஷ்பாபுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.கொளத்துார் தொகுதியில், 259 பூத் கமிட்டிகள் உள்ளன. இதில், 30 சதவீதம் பூத் கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்ட, உறுப்பினர்கள் குறித்து விசாரித்தபோது, புகைப்படம் உள்ளிட்ட எல்லாம் போலி என்பதை, பழனிசாமி கண்டறிந்துள்ளார். இதையடுத்து, மாவட்டச் செயலர் வெங்கடேஷ்பாபுவை, நேற்றுமுன்தினம் இரவு, தன் வீட்டிற்கு வரவழைத்த பழனிசாமி, சரியாக செயல்படாவிட்டால் பதவியை பறித்துவிடுவேன் என, கடுமையாக கண்டித்துள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கொளத்துார் தொகுதியை சேர்ந்த, ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர், பல்வேறு புகார்களால் கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தவில்லை. சாலை பள்ளத்தில், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்து, சிறுமி இறந்தது தொடர்பாகவும் போராட்டம் நடத்தவில்லை.தி.மு.க., அமைச்சர் ஒருவர், அ.தி.மு.க., வில் இருந்த போது, வெங்கடேஷ்பாபுவை அ.தி.மு.க., விற்கு அழைத்து வந்தார். எனவே, அவருக்கு விசுவாசமாக வெங்கடேஷ்பாபு இருந்து வருகிறார் என, கட்சி தலைமைக்கு, புகார்கள் சென்றதால், பழனிசாமி அவரை அழைத்து கண்டித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மா.செ.,க்களை மாற்ற முடியாதது ஏன்?

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையில், எட்டு மாவட்டச் செயலர்கள் உள்ளனர். இதில், வட சென்னை, தென் சென்னையை சேர்ந்த நான்கு மாவட்டச் செயலர்கள், ஒரே அணியாக 'சிண்டிகேட்' அமைத்து செயல்படுகின்றனர். இவர்களில் மூன்று பேர் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தி.மு.க., வில் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கும், அண்ணாநகர் முக்கிய புள்ளியின் வாரிசுடன், அ.தி.மு.க., வை சேர்ந்த நான்கு மாவட்டச் செயலர்களும் இணைந்து, தொழில் செய்து வருகின்றனர். எனவே, தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, அவர்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை. கட் சிதலைமை உத்தரவுக்காக, பெயரளவுக்கு ஆளுங்கட்சியை எதிர்க்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச் செயலராக இருந்தபோது, தி.மு.க.,வினிரிடம் மறைமுக தொடர்பு வைத்து, தொழில் செய்வது தெரிய வந்தால், உடனே கட்சி பதவியிலிருந்து நீக்கி விடுவார்.ஆனால், பழனிசாமி பொதுச் செயலரான பின், மாவட்ட செயலர்கள் ஆதரவு தனக்கு வேண்டும் என்பதால், அவர்களை நீக்க தயங்குகிறார். இதனால் மாவட்ட செயலர்கள், தன்னிச்சையாக செயல்படுகின்றனர்; கட்சி தலைமை உத்தரவை மதிப்பதில்லை. தங்கள் ஆதரவாளர்களுக்கு மட்டும் பதவி கொடுக்கின்றனர். இதனால் கட்சி தேய்ந்து வருகிறது.செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சி வளர்ச்சி அடையாது. பழனிசாமி துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை