தாம்பரம் சாலைகளில் பேட்ச் ஒர்க் பணி ஜரூர்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 5 மண் டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளது. 1,000த்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இதில், ஏராளமான சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை பணி முடிந்த சாலைகள் சீரமைக்கப்படாததால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில், குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி, மேலும் பல சாலைகள் சீர்குலைந்தன. இதனால், மீண்டும் மழை துவங்குவதற்கு முன், குண்டும், குழியுமான சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது . அதன்படி, 5 மண்டலங்களிலும் சீர்குலைந்த சாலைகளை கணக்கிட்டு, அவற்றில் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளும் பணியில், அந்தந்த மண்டல பொறியியல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.