சென்னை, புறநகர் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு!
சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு அரசால் குத்தகைக்கு வழங்கப்பட்ட, 160 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, அங்கு 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பூங்கா அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அங்குள்ள மூன்று குளங்களை, சென்னை மாநகராட்சி வாயிலாக துார்வாரும் பணி நடந்து வருகிறது. புதிதாக 4 குளங்கள் அமைக்கப்பட உள்ளன. அப்பணிகளை முதல்வர் ஸ்டாலின், நேற்று ஆய்வு செய்தார். பின், வேளச்சேரி வீராங்கல் ஓடை, நாராயணபுரம் ஏரி துார்வாரும் பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சுப்பிரமணிய, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:மழை வெள்ள தடுப்பு பணி குறித்து, சிலர் தவறான தகவல்களை பரப்பி, அரசுக்கு எதிராக திசை திருப்புகின்றனர். நாங்கள் சிறப்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து நான் சொல்வதைவிட, மக்களிடம் சென்று கேட்டால், அவர்களே சொல்வார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பணிகளை செய்துள்ளோம். அதனால், பெரிய அளவில் மழை பெய்தும் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, வெள்ள தடுப்பு குறித்து ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஒரே அடியாக பணிகளை செய்ய முடியாது என்பதால், கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறோம். இன்னும் 20 முதல் 30 சதவீத பணிகள் எஞ்சியுள்ளன.இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதன்பின், சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் சென்னை மக்கள் சார்பாக வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறினார்.
'தொய்வின்றி
களப்பணி தொடரும்!'கனமழை குறித்த அலர்ட் பெற்றவுடன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொது மக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களில், மழைநீர் தேங்காமல் சரி செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றும் வரையில், தொய்வின்றி களப்பணியை தொடர்வோம்.- முதல்வர் ஸ்டாலின்.