பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்: முதல்வர் உத்தரவு
சென்னை: 'பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டப்பணி முடித்து, பிப்ரவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்' என, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 24 துறைகளில், 3.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 288 முக்கியமான திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, அரசின் முத்திரை திட்டங்கள் என அறிவிக்கப் பட்டு, அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அரசின் முத்திரை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை செயலர் பிரதீப் யாதவ், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால் உள்ளிட்ட பல துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.