பொது ரேஸ் ரோமியோக்கள் மீண்டும் அத்துமீறல்
அண்ணா நகர், :அண்ணா நகர், கோயம்பேடு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் நள்ளிரவு 'பைக் ரேஸ்' நடத்திய சம்பவத்தில், அண்ணா நகர் போக்குவரத்துக் புலனாய்வு போலீசார் 10 பேரை கைது செய்தனர்; 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.சமீபத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் 18 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதித்தனர்.தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தாலும், போலீசாருக்கு சவால் விடும் வகையில் 'பைக் ரேஸில்' வாலிபர்கள் ஈடுபடும் சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, அந்த வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் சிலர் பதிவிட்டு உள்ளனர். மேலும் 'எங்கள் சாலையை நாங்கள் ஆளுவோம்' என்ற வாசகத்துடன் அந்த வீடியோவானது பதிவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து, அந்த வீடியோ காட்சியில் பதிவான இருசக்கர வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.