வாசிப்பு பழக்கத்தை வீட்டில் துவங்க வேண்டும்: பட்டுக்கோட்டை பிரபாகர்
சென்னை, புத்தகக் காட்சி வெளி அரங்கில் 'கதைத் தொழிற்சாலை' என்ற தலைப்பில், பட்டுக்கோட்டை பிரபாகர் பேசியதாவது:நம் தாத்தா, பாட்டிகள்தான் நிஜமான கதைத் தொழிற்சாலைகள். இப்போது, செயற்கை அறிவு எனும் ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, நம் மனதிற்குள் இருக்கும் கதைக்கருவை, கதையாக மாற்றிட முடியும்.ஆனால், வட்டார வழக்கு எனும் மொழிநடை ஏ.ஐ., நுட்பத்தில் சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில், அதுவும் சாத்தியமாகலாம். ஒரு கதைக்கருவை நாவலாக மாற்றும் அளவிற்கு, ஏ.ஐ., நுட்பம் வளர்ந்து வருகிறது.இன்று, வாசிப்பின் பக்கம் திரும்பாத ஒரு கூட்டம் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் மிகப்பெரிய அவலங்களை ஒரு செய்தியாக நினைத்து, சாதாரணமாக கடந்து செல்கிறோம்.அறச் செயல்பாடு குறைந்து வருகிறது. அதை எப்படி வளர்க்கப் போகிறோம் என தெரியவில்லை. ஒவ்வொரு செயலிலும் அறம் வேண்டும். அதுபோல், எழுத்திலும் அறம் வேண்டும்.சிந்திக்க, சிரிக்க, அழ வைத்த புத்தகங்கள் உண்டு. வாழ்க்கையை மாற்றும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. வாசிப்பின் முக்கியத்துவம் கருதி, அந்தப் பழக்கத்தை வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அதற்கான ஆசையை குழந்தைகளிடம் துாண்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.