பொருந்தா நிலை கல்லீரல் மாற்று சிகிச்சை மியாட்டில் ஐ.டி., ஊழியருக்கு மறுவாழ்வு
சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் குழு, பொருந்தா நிலை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, ஐ.டி., ஊழியருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.சென்னை மியாட் சர்வதேச மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன், ரத்த மாற்று சிகிச்சை பிரிவு நிபுணர் ஜோஸ்வா டேனியல் ஆகியோர் கூறியதாவது:மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரேம்நாத், 32. கோவையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன.ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், கால்களில் வீக்கத்தால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றமும் இல்லாததால், மியாட் மருத்துவமனையில் ஆலோசனை பெற வந்தார்.அவருக்கு, கடுமையான மஞ்சள் காமாலை, பித்த நாள நோய் காரணமாக கல்லீரலில் பித்தம் குவிந்து, சேதத்தை ஏற்படுத்தி, இறுதியில் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுத்தது கண்டறியப்பட்டது.அவரது உயிரைக் காப்பாற்ற, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை அவசரமாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பிரேம்நாத், 'ஏ நெகடிவ்' ரத்த வகையை சேர்ந்தவர். ரத்த தானம் செய்யக்கூடிய, பொருத்தமான ரத்த வகை கொண்ட உறவினர்கள் யாரும் இல்லாததால், அறுவை சிகிச்சை எங்களுக்கு சவாலானது. இருந்தபோதிலும், 'பி பாசிடிப்' ரத்த வகையுள்ள அவரது மனைவியின் கல்லீரலைப் பயன்படுத்தி, பொருந்தா நிலை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்தோம்.உறுப்பு நிராகரிப்புக்குப்பின் அதிக ஆபத்தை குறைக்க, பல்வேறு நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள், அவருக்கு அதிகம் வழங்கப்பட்டன. இது, அவரது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தியது. இதனால், அவர் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிட்டது. கூடுதலாக, பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சையை மேற்கொண்டோம். அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு மாதங்களில் பிரேம்நாத் அவரது மனைவி முன்னேற்றம் அடைந்து, தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்த வகை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக செலவு கொண்டவை. முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மியாட் குழு செலவில் சிகிச்சை அளித்துள்ளது.இவ்வாறு கூறினர். பூரண குணமடைந்த பிரேம்நாத், மனைவியும், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாசை சந்தித்து வாழ்த்து பெற்றார்.***