பள்ளியில் எலக்ட்ரீஷியன் பலி உடலுடன் உறவினர்கள் முற்றுகை
ஆலந்துார், ஆலந்துார், மடுவின்கரை, 5வது தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 26; எலக்ட்ரீசியன். இவர் ஆலந்துாரில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றிக்காக, ஒலிப்பெருக்கி அமைக்கும் பணியில், நேற்று ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் மீது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கி விழுந்தார். பள்ளியில் இருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு ஜார்ஜை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பரங்கிமலை போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். நேற்று மதியம், குரோம்பேட்டை மருத்துவமனையில் உடலை பெற்ற உறவினர்கள், ஆலந்துார் பள்ளியின் நுழைவு வாயில் முன் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி, ஜார்ஜின் மறைவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி, கோஷங்களை எழுப்பினர்.பரங்கிமலை போலீசார் அங்கு வந்து, அவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் கலைந்தனர். படப்பை அருகே, செரப்பணஞ்சேரியை சேர்ந்தவர் ராஜி, 48. இவர், படப்பை அருகே வாஞ்சுவாஞ்சேரியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை செய்து வந்தார்.அதே பகுதியில் உள்ள கடை உரிமையாளர் வீட்டில், பெயின்ட் அடிக்கும் பணி நடந்தது. அங்கு சென்ற ராஜி, தண்ணீர் இறைக்கும் மின்மோட்டாரை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.