கொள்ளையரிடம் இருந்து தப்பியது ரூ.20 லட்சம்
ஸ்ரீபெரும்புதுார், கார் கண்ணாடி உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர், நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரம் சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு, பத்திர பதிவிற்காக 'நிஷான் சன்னி' காரில் சென்றார். சார்- - பதிவாளர் அலுலகம் எதிரே காரை நிறுத்தி, அலுவலகத்தின் உள்ளே சென்றபோது, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் இருவர், காரின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்ப முயன்றனர். இதை கண்ட, ராமகிருஷ்ணன் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றார். அச்சமடைந்த கொள்ளையர்கள், 20 லட்சம் ரூபாயை அங்கேயே போட்டு தப்பினர். சுங்குவார்சத்திரம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.