உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.525 கோடி பன்னாட்டு அரங்க பணி மெட்ரோ கட்டுமானத்தால் இடையூறு

ரூ.525 கோடி பன்னாட்டு அரங்க பணி மெட்ரோ கட்டுமானத்தால் இடையூறு

சென்னை:மெட்ரோ ரயில்வே கட்டுமான பொருட்கள் அகற்றப்படாததால், கருணாநிதி பன்னாட்டு அரங்க கட்டுமான பணியை துவங்க முடியாமல், பொதுப்பணித்துறையினர் தவித்து வருகின்றனர்.தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், உலக திரைப்பட விழாகள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த, சென்னையில் பெரிய அளவில் அரங்கம் இல்லை. சிறிய அரங்குகளில் பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும்போது, இடநெருக்கடி ஏற்படுகிறது. வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுகாட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இங்கு, 525 கோடி ரூபாய் மதிப்பில், 10,000 பேர் அமரும் வகையில் அரங்கமும், 5,000 வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது. பல்வேறு சிறிய அரங்கங்கள், விற்பனை மையங்கள், உணவகங்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தை, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் கட்டி திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கேற்க ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை செய்து முடித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியும் கிடைத்துள்ளது. ஆனால், கட்டுமானம் நடக்க வேண்டிய இடத்தில், மெட்ரோ ரயில்வே கட்டுமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை அகற்றுவதில் மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது.இதனால், கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவதற்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து இன்னும் தேதி கிடைக்கவில்லை. இதனால், குறித்த காலத்திற்குள் பணியை செய்து முடிக்க முடியுமா என்ற கவலையில் பொதுப்பணித் துறையினர் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ