உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகர பஸ் ஓட்டுனர், நடத்துனரின் செயல்பாடு... ரகசிய கண்காணிப்பு! தவறுகள் உறுதியானால் 29 நாள் சஸ்பெண்ட்

மாநகர பஸ் ஓட்டுனர், நடத்துனரின் செயல்பாடு... ரகசிய கண்காணிப்பு! தவறுகள் உறுதியானால் 29 நாள் சஸ்பெண்ட்

சென்னை: பயணியரின் அடுக்கடுக்கான புகார்களை தொடர்ந்து, மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடுகளை, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறுவோர் மீது, 29 நாட்கள், 'சஸ்பெண்ட்' செய்வது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகளில், தினமும், 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். மாநகர பேருந்து சேவையில், பயணியருக்கு அவ்வப்போது சிரமம் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருப்பு

பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படாதது,உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்வது, மாணவர்களை கண்டதும்நீண்ட துாரம் சென்று நிறுத்துவது, மொபைல் போனில் பேசிக்கொண்டும், பாட்டுக் கேட்ட படியும் பேருந்துகளை இயக்குவது, சில்லரை இல்லை என பயணியரை திட்டித் தீர்ப்பது என, ஓட்டுனர், நடத்துனரின் செயல்பாடுகள் பயணியரிடம் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பான புகார்கள் அதிகரித்ததால், மாநகர போக்குவரத்து கழகம், தனியார் நிறுவனம் வாயிலாக, கடந்த மாதம், 'சர்வே' நடத்தியது.இந்த சர்வேயின் போது, ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடுகள் குறித்து, பயணியர் பல்வேறு புகார்களை அடுக்கினர். இதை அறிக்கையாக பெற்ற மாநகர போக்குவரத்துக் கழகம், ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்க துவங்கியுள்ளது.பேருந்துகளில் பயணித்தும், முக்கிய பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களில் சாதாரண பயணியரை போல் நின்றவாறும், அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து, மாநகரபோக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த மாதம் பயணியரிடம் சர்வே நடத்தப்பட்டது. அதில் முக்கியமாக தெரியவந்த பிரச்னைகள்:நெரிசல் மிக்க வழித்தடங்களில் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும். ஓட்டுனர், நடத்துனர்கள் சிலர் விதிகளை பின்பற்றுவதில்லை. நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றனர்; அலுவலகநேரங்களில் பேருந்துகள் வருவதில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பின், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பேருந்துகள் வருகின்றன.

தினமும் ஆய்வு

இவை உள்ளிட்ட புகார்களை தெரிவித்தனர். இதன் அடிப்படையில், உண்மை தன்மையை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.புதிய பேருந்துகள் வந்தவுடன், படிப்படியாக சேவையை அதிகரிக்கஉள்ளோம். இதற்கிடையே, மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடுகளை, ஆங்காங்கே அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்கி விடுகின்றனரா அல்லது தள்ளி நிறுத்துகின்றனரா; பயணியர் கேட்கும் இடத்தில் பேருந்தை நிறுத்துகின்றனரா என்றெல்லாம் கண்காணிக்கின்றனர்.அதுபோல், மொபைல் போன் மற்றும் ஹெட்போனை பயன்படுத்தியபடி பணியில் ஈடுபடுகின்றனரா என்பதெல்லாம், ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் கவனத்துக்கு தெரியாமல், ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு தினமும் நடக்கிறது.குற்றச்சாட்டில் சிக்கும், பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மீது 29 நாட்கள், 'சஸ்பெண்ட்' மற்றும் மெமோ, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மற்ற விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நடவடிக்கை எடுக்கலாம்!தவறு செய்யும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; தவறில்லை. ஆனால், பெரிய தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. முதலில் அறிவுரைகளை வழங்கலாம். தொடர்ந்து தவறு செய்யும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம். பயணியர் மத்தியில், திடீரென பேருந்தில் ஏறும் அதிகாரிகள், நடத்துனர் வைத்திருக்கும், 'கேஸ் பேக்'கை வாங்கி சோதனை செய்கின்றனர். நாங்கள் ஏதோ குற்றம் செய்வதுபோல், பயணியர் மத்தியில் எண்ணம் ஏற்படுகிறது. இதெல்லாம், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.- காமராஜர்செயலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவை.

சிக்னல்களில் பஸ்களுக்கு முன்னுரிமை திட்டம்

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் சிக்னல்களில், ஜி.பி.எஸ்., கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனால், சிக்னல்கள் அருகே மாநகர பேருந்துகள் வருவதை கண்டறிந்து, சிவப்பு விளக்கின் கால அளவை குறைத்து, பச்சை விளக்கின் கால அளவை நீட்டிக்க முடியும். மேலும், தேவையற்ற நிறுத்தங்கள் இல்லாமல், பேருந்துகள் சிக்னல்களை எளிதில் கடந்து செல்ல முடியும். இந்த திட்டம், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் சி.டி.ஏ.சி.,யுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, மாநில அரசு மற்றும்சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 82 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, ஆலந்துார் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், வரும் ஜனவரி முதல், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M S RAGHUNATHAN
டிச 27, 2024 13:22

இதற்கு பதிலாக, தவறு செய்யும் ஊழியர் ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் பணி புரிய வேண்டும் என்று தண்டனை விதிக்கலாம்.


vee srikanth
டிச 27, 2024 10:38

சாலைகளும் ஒழுங்காக இருக்கா என யார் கண்காணிக்கிறார்கள் ?


Sivagiri
டிச 27, 2024 09:17

மற்ற எல்லா மாவட்டங்களிலும், முக்கியமாக தனியார் பேருந்துகளுக்கு, எந்த கட்டுப்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை, புறப்படுவது தாமதம், ஆனால் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு, அதி வேகம், சாலை விதிகள் கிடையாது, எமன் போலத்தான் பறக்கின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை