உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுாற்றாண்டு பூங்காவுடன் செங்காந்தள் பூங்கா இணைப்பு

நுாற்றாண்டு பூங்காவுடன் செங்காந்தள் பூங்கா இணைப்பு

சென்னை :கோபாலபுரத்தில் துவங்கப்பட்ட செங்காந்தள் பூங்கா சந்தடியின்றி நுாற்றாண்டு பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியின் போது கோவையில் நடந்த செம்மொழி மாநாடு நினைவாக, 2010ல் சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில், 7.92 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு அரியவகை மரங்கள் மற்றும் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மட்டுமின்றி, தாவரவியல் மாணவர்களின் பயிற்சி களமாகவும் விளங்கி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2021ல் அ.தி.மு.க., ஆட்சியில், வண்ணாரபேட்டையில் 3.85 ஏக்கரில் பாரம்பரிய பூங்காவும், கோபாலபுரத்தில், 6.81 ஏக்கரில் செங்காந்தள் பூங்காவும், தோட்டக்கலை துறை வாயிலாக அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்தது. சென்னையின் புதிய அடையாளமாக இவை உருவாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், போதிய ஊழியர்களை நியமிக்காததாலும், பூங்காக்களின் செயல்பாடுகள் குறைந்தது. இந்த நிலையில், தனியாரிடம் இருந்து தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில், நுாற்றாண்டு பூங்கா அமைக்கும் பணிகள் கடந்தாண்டு துவங்கி, அக்டோபரில் திறக்கப்பட்டது. இங்கு கட்டணம் செலுத்தி பார்வையாளர்கள் செல்லலாம். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட செங்காந்தள் பூங்காவும், நுாற்றாண்டு பூங்காவும் அருகருகே இருந்ததால், பின்பகுதி வழியாக இரண்டும் இணைக்கப்பட்டு உள்ளன. இதனால், அதிக செலவின்றி செங்காந்தள் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகளுக்கு தெரிந்தால், பெரிய அளவில் பிரச்னை ஏற்படும் என கருதி, தோட்டக்கலைத்துறையினர் சந்தடியின்றி இந்த திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். தோட்டக்கலைத்துறையின் பூங்காக்கள் பட்டியலில் இருந்து செங்காந்தள் பூங்கா பெயர் நீக்கப்பட்டுள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ