| ADDED : செப் 29, 2024 12:24 AM
சென்னை, கர்நாடகா மாநிலம், பெங்களூரு பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில், ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில், சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி, கடந்த ஆண்டு துவங்கியது.சமீபத்தில் இப்பணி முடிந்ததை அடுத்து, அந்த ரயிலை மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது.எனவே, பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே சிலீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு அனுப்பியுள்ள மனு:கடந்த 40 ஆண்டுகளில், சென்னை - மும்பை இடையே, மூன்று தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு நகரங்கள், இந்தியாவில் முக்கிய மெட்ரோ நகரங்களாக உள்ளன.கடந்த 20 ஆண்டுகளில் விரைவான தொழில்மயமாக்கல் காரணமாக, இந்த தடத்தில் பயணியர் தேவை அதிகரித்துள்ளது.எனவே, சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே சிலீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை துவங்க வேண்டும். மேலும், இந்த ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும்.இந்த ரயில், தொழில் துறையின் மையமாக திகழும் ஸ்ரீபெரும்புதுார் பயணியருக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.