பொறியியல் கல்லுாரி டேபிள் டென்னிஸ் இருபாலரிலும் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
சென்னை: தாம்பரத்தில் இயங்கிவரும் சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், சீதாராமன் - -லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி, இரு நாட்களாக நடந்தது.பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், ஆண் - பெண் இரு பாலரிலும், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இதில், ஆண்கள் பிரிவில், துவக்கம் முதலே கோலோச்சிய எஸ்.ஆர்.எம்., அணியினர், காலிறுதியில், சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரியையும், அரையிறுதியில் எஸ்.எஸ்.என்., கல்லுாரியையும் தோற்கடித்தனர்.இறுதிப் போட்டியில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி கைப்பற்றியது.பெண்கள் பிரிவிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய எஸ்.ஆர்.எம்., அணி சாய்ராம் கல்லுாரி அணிகளை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இருபாலரிலும் சாய்ராம், எஸ்.எஸ்.என்., ஆகிய கல்லுாரி அணிகள் முறையே, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.