பைக்குகள் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி; மகன் படுகாயம்
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 38. இவர், வாலாஜாபாத் மாசிலாமணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா, 32, மகன் சுபக் ஷன், 12, உள்ளனர்.சண்முகம் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் மகனை, காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றார்.சிகிச்சை முடிந்து, இரவு 9:30 மணிக்கு மகனுடன் பைக்கில் வீடு திரும்பினார். காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், வெண்குடி அருகே வந்தபோது, காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 30, என்பவர் ஓட்டி வந்த, 'யூனிகார்ன்' பைக்குடன் மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்த சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சுபக் ஷன் மற்றும் மற்றொரு பைக்கில் வந்த கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.