தெலுங்கானா சிறுமி ஆலந்துாரில் மீட்பு
ஆதம்பாக்கம்:ஆலந்துார் ரயில் நிலைய பகுதியில், தெலுங்கானா சிறுமி மீட்கப்பட்டார். ஆலந்துார் ரயில்வே கேட் அருகில், 16 வயதுள்ள சிறுமி ஒருவர் நேற்று அழுது கொண்டிருந்தார். அங்கிருந்தோர், பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், தெலுங்கானாவைச் சேர்ந்த சிறுமி என்றும், ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு கடையில் இரு தினங்களுக்கு முன் பணியில் சேர்ந்ததும் தெரிய வந்தது. அங்கு முறையான உணவு வழங்காமல், வேலை வாங்குவதால் தப்பித்து வந்ததாக கூறி உள்ளார். சிறுமியை ஆதம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், மாவுக்கடை உரிமையாளர் மற்றும் சிறுமியின் உறவினர்களை அழைத்து விசாரித்தனர். பின், சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.