உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மக்கள் பாராட்டுதான் பெரிய பதக்கம் போலீஸ் கமிஷனர் அருண்

மக்கள் பாராட்டுதான் பெரிய பதக்கம் போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து, 10 ஆண்டுகளில் எவ்வித தண்டனையும் இன்றி, சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, தமிழக முதல்வர் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு சென்னையில், 770 பேர் உட்பட, 3,000 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.இதன்படி, சென்னை போலீசாருக்கான பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவில், 263 பேர், போக்குவரத்து பிரிவில், 172 பேர் உட்பட, 770 பேருக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதல்வரின் காவல் பதக்கம் மற்றும் நற்சான்றிதழை வழங்கினார்.பதக்கம் வழங்கிய பின், கமிஷனர் அருண் பேசியதாவது: பதக்கம் பெற்றவர்களுக்கு, இம்மாதம் முதல், 400 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுடன் காவல் துறையை அணுகும்போது, கனிவுடன் நடந்து, தங்களால் முடிந்தவரை சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதன் வாயிலாக கிடைக்கக்கூடிய பாராட்டுதான் மிகப்பெரிய பதக்கம்.சென்னை காவல் துறையில், 23,000 பேர் உள்ளனர். இதில் ஒருவர் தவறு செய்தாலும் அது, மற்றவர்களையும் பாதிக்கிறது.இதை உணர்ந்து, நம்மால் எவ்வித இழுக்கும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, அனைவரும் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் கபில் குமார் சரட்கர், கண்ணன், சுதாகர், ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ