தியாகராஜர் பந்தம் பறி உற்சவம் கோலாகலம்
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம் 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்வுகளான திருத்தேரோட்டம், 10ம் தேதியும், திருக்கல்யாணம் 12ம் தேதி நடந்தது. மாசி பிரம்மோத்சவத்தின் நிறைவு நிகழ்வான பந்தம் பறி உத்சவம் - தியாகராஜர் 18 திருநடனம், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது.சிறப்பு மலர் அலங்காரத்தில், தியாகராஜ சுவாமி தொட்டியில் எழுந்தருளினார். வடிவுடையம்மன் தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாடவீதி உத்சவம் நடந்தது. ஒய்யார திருநடனம்
அதைத்தொடர்ந்து, சன்னதி தெரு - அகத்தீஸ்வர் கோவில் முன் எழுந்தருளிய தியாகராஜ சுவாமியிடம், திருவிழா வரவு - செலவு கணக்கு வாசித்து காண்பிக்கும் வைபவம் அரங்கேறியது.தொடர்ந்து, வடிவுடையம்மன் சன்னதி முன் தெற்கு முகம் நோக்கி எழுந்தருள, வடக்கு முகம் நோக்கியவாறு தியாகராஜ சுவாமி, ஒய்யார திருநடனமாடினார்இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வுடன், தியாகராஜ சுவாமி மாசி பிரமோற்சவம் நிறைவடைந்தது.