கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை: பழனிசாமி
சென்னை :கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதால், 'கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த மூன்று நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது தி.மு.க., அரசு. அதை முறையாக நிர்வாகம் செய்து, பஸ் வசதிகளை உறுதி செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை.பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா; அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக்கூட, தி.மு.க., அரசு செய்யவில்லை. சொந்த ஊருக்கு செல்லக்கூட மக்களை பரிதவிக்க வைக்கும் தி.மு.க., அரசுக்கு என் கண்டனம்.கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், பஸ் சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை, தி.மு.க., அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.***